Magic Stone 19
மந்திரக்கல்
19
“இதில் யசோவை எதுக்கு இழுக்கிற” தெரிந்து கொண்டே கேட்டான்
பரசு.
“இழுக்கிறேன், ஏன்னா அவ அண்ணனா அவ சந்தோஷமான வாழ்க்கையைப் பத்தின பயம் எனக்கு இருக்கு. நீ இப்படி ரத்னா பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தா அவளோட நிலைமை என்ன” உரிமையாய் கோபம் காட்டினான்
சாஸ்தா.
“நான் எப்படிப் போனா என்ன. என்னோட நிலைமை எதுக்காக அவளை பாதிக்குமுன்னு நினைக்கிற” நண்பன் மனம் புரிந்தும் புரியாதது போல் நடந்துகொண்டான்.
“ஓகோ, நான் என்ன கேட்க வரேன்னு சாருக்குப் புரியல அப்படித் தானே" கேட்டவன் குரலில்
அத்தனை நக்கல்.
“இங்க பார் சாஸ்தா, யசோ மேல எனக்கு எந்த அபிப்ராயமும் இல்லை. போன ஜென்மத்தில் அவ என் பொண்டாட்டியா இருந்திருக்கலாம். அதுக்காக, இப்பவும் அப்படியே நடக்கணுமுன்னு அவசியம் இல்லையே" என்க,
“நான் சொன்னதை வைச்சு என்னை மடக்க ட்ரை பண்றியா? இது உனக்கான காலம் அதனால நீ சொல்ற எல்லாத்தையும் நான் அமைதியா கேட்டுக்கிறேன். எனக்குன்னு ஒரு காலம் வர, ரொம்ப நாள் ஆகாது டா, அப்ப உனக்கு இருக்கு" கோபித்துக்கொண்டு
திரும்பி அறைக்குச் செல்ல முயல, சமாதானம் செய்யும் நினைப்பில் அவன்
கையைப் பிடித்தான் பரசு.
"இதுநாள் வரைக்கும் யசோவுக்கு மாப்பிள்ளை பார்க்கிறதைப் பத்தி கனவில் கூட நான் நினைச்சது கிடையாது. அவ பெரிய பொண்ணா
ஆன நாளில் இருந்து, இல்ல அப்படிச் சொல்வதை விட நீயும், நானும் நண்பர்களாப் பழக ஆரம்பிச்ச நாளில் இருந்து அவளுக்கு ஏத்த ஜோடி நீ தான்னு ஆத்மார்த்தமா
நம்பினேன்.
இந்த முன்ஜென்மம், பின்ஜென்மம், வீணாப்போன ஜென்மம் எதுவும் எனக்கு அப்பத் தெரியாது, எனக்கு தெரிஞ்சதெல்லாம் என் நண்பன் நீ மட்டும் தான். அதுக்கு ஏத்த மாதிரி நீயும் ஊர் ஊரா சுத்தினாக் கூட வேற எந்த பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காம இருந்த. எப்படி ஒரு உத்தமனை என் தங்கச்சிக்கு தேர்ந்தெடுத்து இருக்கேன்னு நான் பெருமைப் படாத நாளே கிடையாது தெரியுமா?
என்னோட மொத்த சந்தோஷத்துக்கும் ஆப்பு வைக்கிற மாதிரி இப்ப ஒரு லோடு மண்ணை அள்ளி என் தலையில் போட்டுட்ட இல்ல. மறக்க மாட்டேன் டா எதையும் நான் மறக்க மாட்டேன்” கோபித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் சாஸ்தா.
நண்பன் சென்ற பாதையை பார்த்து நின்றிருந்த பரசு, “நான் கூட என் தங்கச்சி திலோத்தமா என்னோட இருந்திருந்தா அவளை உனக்கே கல்யாணம் பண்ணி வைச்சு சந்தோஷப்பட்டிருப்பேன்னு பலமுறை நினைச்சுப் பார்த்து இருக்கேன் டா.
அவ இப்ப திரும்ப வந்திட்டா தான். ஆனா அவளுக்கு நான் தான் அவ அண்ணன்னு இன்னும் தெரியாது. அவளுக்கு பாய் பிரண்டு ஒருத்தன் இருக்கிறதா யசோ சொன்னா, யுவா கூட அவ மேல ஆசைப்படுற மாதிரி இருக்கு. இது எல்லாத்துக்கும் மேல திலோவோட மனசுக்குள்ள என்ன இருக்கோ தெரியலையே.
இது
தான்டா நிதர்சனம். நாம எது வேண்ணா
ஆசைப்படலாம், ஆனா நடக்கிற எதுவும் நம்ம கையில் இல்லையே. ஆண்டவன் விளையாடும் பொம்மலாட்டத்தில் அவன் ஆட்டுவிக்கும் பொம்மைகள் தானே நாம”என்று தனக்குள் நினைத்த பரசு ஏதேட்சையாய் நிமிர, கோவத்துடன் சென்ற சாஸ்தா வேகமாகத் திரும்ப வரவும் சற்றே பயந்து போனான்.
“நீ சொன்னதை நான் ஏத்துக்கிறேன். இனி எப்பவும் உன்னையும், அவளையும் இணைச்சு கற்பனை கூட பண்ண மாட்டேன். உனக்குள்ளேயும் இந்த உறுதி கடைசி வரைக்கும் இருக்குமுன்னு நம்புறேன். உன் அளவுக்கு இல்லன்னாலும், ஒரு நல்லவனாப் பார்த்து நான் அவளுக்குக் கல்யாணம் பண்ணி வைச்சுக்குறேன். ஆனா அதுக்கு நீயும் எனக்கு கொஞ்சம் ஒத்துழைக்கணும்” என்க, என்ன சொல்ல வருகிறாய்
என்பதாய் புருவம் சுருக்கிப் பார்த்தான் பரசு.
“உன்னை மாதிரி ஒருத்தன் கூட பழகும் போது யாரா இருந்தாலும் அவங்களுக்கு உன் மேல காதல் வர வாய்ப்பு இருக்கு. யசோ உன் மேல ஆசைப்படக் கூடாது, ஆசைப்பட்டு அது கிடைக்காம போகுற வலி அவளுக்கு வேண்டாம். என்ன சொல்ல வரேன்னா நீ அவளுக்கு ரொம்ப இடம் கொடுத்திடாதே“ என்றான் சாஸ்தா.
கேட்பதற்கு சற்றே கஷ்டமாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டான் பரசு. மேற்கொண்டு பேசுவதற்கு எதுவும் இல்லை என்று சாஸ்தா சென்றுவிட, அதற்கு எதிர்ப்புறம் திரும்பி நின்று, அங்கிருந்த கும்மிருளை இரசிக்க ஆரம்பித்தான் பரசு.
சிறிது நேரம் கழித்து யாரோ தன் கையைப் பிடித்து இழுப்பதை உணர்ந்தவன் திரும்பிப் பார்க்க, சாஸ்தா தான் முன்னால் நின்று அவனை வழி நடத்திச் சென்று கொண்டிருந்தான்.
“டேய் என்னைத் தனியா விட்டுட்டுப் போகவே மாட்டியா?
எத்தனை முறை போயிட்டு வந்துட்டு இருப்ப“ சிரித்துக்கொண்டே கேட்க, “ரூமுக்குள்ள ஜன்னல் இருக்கு. அங்க நின்னு எவ்வளவு நேரம் வேண்ணாலும் இருட்டை வெறிச்சு பார்த்துக்கிட்டு இரு. ரூம் கதவைச் சாத்தினா தான் எனக்கு நிம்மதியா தூக்கம் வரும்” என்றவனைப் பார்த்து சிரிக்கத்
தான் தோன்றியது பரசுவிற்கு.
அடுத்த நாள் விடியலில் ஆரம்பித்த மந்திரக்கற்களைத்
தேடிய அவர்களின் பயணம், இனிவரும் ஜென்மங்கள் எதிலும் மறக்க முடியாதபடி அமையப் போகிறது
என்று தெரியாமல் கிளம்பத் தயாரானார்கள் நண்பர்கள்.
“எல்லோரும் கிளம்பியாச்சா. சீக்கிரம்” பரபரப்பாய் அனைவரையும் கிளப்பினான் பரசு.
“என்ன யசோ இவங்க கூட வந்தா நிறைய இடங்கள் சுத்திப் பார்க்கலாம் ஜாலியா என்ஜாய் பண்ணலாமுன்னு ஆசை காட்டி கூட்டிட்டு வந்த. இங்க என்னடான்னா இப்படித் தூங்க விடாம தொந்தரவு பண்றாங்க. எனக்கு ரொம்ப தூக்கமா வருது” சோம்பல் முறித்துக்கொண்டே
சொன்னாள் திலோ.
“நீ சொல்லிட்ட நான் சொல்லல அவ்வளவு தான் வித்தியாசம். ஏற்கனவே என் கூடப்பிறந்த தொல்லைக்கு என்ன ஆச்சோ தெரியல. இஞ்சி திண்ண மங்கி மாதிரி மூஞ்சியை வைச்சுக்கிட்டு இருக்கு. இந்த நேரத்தில் நானும் எதையாச்சும் சொன்னா, அவ்வளவு தான் அவன் மூஞ்சு எண்ணெயில் போட்ட பக்கோடா மாதிரி ஷேப்பே இல்லாம போயிடும். அதனால அமைதியா இருக்கேன். நீயும் அப்படியே
இரு” என்று தோழியை சமாதானப்படுத்தினாள் யசோ.
“மச்சான் இப்ப நாம எங்க போகப் போறோம்” யுவா பேச்சைத் துவங்கி வைக்க, “ஹோட்டல் வெக்கேட் பண்ணிட்டு நேரே, திருவனந்தபுரம் வட்டியூர்காவுக்குப் போறோம். அங்க தான் கேரள வனத்துறை அலுவலகம் இருக்கு. அங்க அகஸ்தியர் கூடம் போக நாம ஏற்கனவே பே பண்ண பில்லைக் காட்டி பெர்மிஷன் வாங்கணும்.
நல்லவேளை, தை மாசம் மகரவிளக்கு நாளிலிருந்து மாசி மாதம் சிவராத்திரி வரையிலான காலகட்டத்துக்குள்ள தான் இந்தப் பயணத்துக்கு அனுமதி கொடுப்பாங்களாம். நம்ம நல்ல நேரம் எல்லாம் தன்னால் ஒத்துப் போயிடுச்சு” சந்தோஷமாகச் சொன்னான்.
“ஆமா அங்க லேடீஸ் வரலாமா” புது சந்தேகம் கேட்டாள் யசோதா.
“அதைப் பத்தி நீ ஏன் கவலைப் படுற திலோ தானே கவலைப்படணும்” சமயத்தில் அவளைக் காலை வாரினாலும், “பதின்நான்கு வயதிற்கு மேற்பட்ட திடகாத்திரமான ஆண்கள், பெண்கள் எல்லோரும் பயணம் செய்யலாம்” என்று பதில் சொல்லி முடித்தான்.
“சரி இங்க இருந்து எப்படி அந்த வனக்காவலர் அலுலகத்துக்கு போகப் போறோம்” அடுத்த கேள்வி வந்தது யுவாவிடம்
இருந்து. சாஸ்தா யாருக்கு வந்த விருந்தோ என்று அமைதியாக அமர்ந்திருந்தான்.
“நாம இப்ப இருக்கிறது கேரளா மாநிலத்தோட தலைநகரம் திருவனந்தபுரத்தில். இங்க இருந்து நாம போகப் போற இடத்துக்கு அதிகாலை ஆறு மணியில் ஆரம்பிச்சு இரண்டு மணி நேரத்துக்கு ஒரு பஸ் இருக்கு. நாம முதல் பஸ்க்கு தான் போகப் போறோம்.
ஒருவேளை அதைப் பிடிக்க முடியலன்னா நேரே நெடுமங்காடு போய் அங்க இருந்து போனக்காடு போறோம். அங்க இருந்து நாலு கிலோமீட்டர் தான்” ஒரு திட்டம் தவறினாலும்
கைவசம் இன்னொரு திட்டம் வைத்திருக்கிறேன். எப்படியும் இந்தப் பயணத்தில் இருந்து பின்வாங்கப்
போவதில்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டான்.
பரசுவின் இந்த உற்றாகம் சாஸ்தாவிற்குள் அதீத எரிச்சலை உண்டு பண்ணியது. அதே எரிச்சலுடன், “பஸ்ஸில் போறதுக்குப் பதில் கார் ஏதாவது ஏற்பாடு பண்ணலாம் இல்ல” கடுப்புடன் கேட்டான்.
“முட்டக்கண்ணு சாஸ்தா கொஞ்சம் சுத்திமுத்தி பாருடா எவ்வளவு அழகான காட்சி. இங்க இருக்கிற அளவுக்கு தூய்மையான காற்றை நான் எங்கேயும் சுவாசித்ததே கிடையாது. இயற்கையோட மிச்சம் இங்க தான்டா இருக்கு. இதை அனுபவிச்சுக்கிட்டே போக பேருந்து பயணம் தான் சரின்னு தோணுது” என்க, அவன் பேச்சில் இருந்த
உண்மை அவன்
நண்பர்களுக்கும் புரியவே செய்தது.
பரசு சொன்ன பேருந்தை பெரிதாக சிரமப்படாமல் கண்டுபிடித்து அதில் அனைவரும் ஏறி அமர, இலக்கை நோக்கிய பயணத்தில் முதல் படியை எடுத்து வைத்ததில் சந்தோஷமாய் இருந்தான் பரசு.
அவன் அருகே உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு வந்தான் சாஸ்தா. அவனைப் பார்த்து தனக்குள் புன்னகைத்துக் கொண்டு, அவன் தோள் மேல் பரசு கையைப் போட அதற்கு நன்றாகவே ஒத்துழைத்தான் அவன் நண்பன்.
தன் இன்னொரு கையால் சாஸ்தாவின் கன்னத்தில் இடித்தவன், “என் செல்ல பாஸ்தா, ச்சே சாஸ்தா. உனக்கு ஏன் மாதவிலக்கில் இருக்கும்
பொண்ணுங்க மாதிரி தொட்டதுக்கெல்லாம் இவ்வளவு கோவம் வருது.
இப்படி
இருக்கிற உன் முகத்தைப் பார்க்கவே சகிக்கல. கண்ட்ராவி வாந்தி வர மாதிரி இருக்கு, கொஞ்சம் சிரிச்சுக்கிட்டு தான் வாயேன்” சின்னப்பிள்ளையைக் கொஞ்சுவது
போல் கொஞ்சினான்.
"ஈஈஈ…” என்று பற்களை அகலமாகக் காட்டி கடுப்பேத்தினான்
சாஸ்தா.
“ஐயோ அம்மா இதுக்கு அந்த உம்முன்னு இருந்த மூஞ்சியே பரவாயில்ல"
“போடா அங்கிட்டு"
“இதுக்கும் அங்கிட்டு போகணும் னா ஜன்னலை உடைச்சிக்கிட்டு கீழ போய் தான் விழணும்"
“போய் விழு எனக்கென்ன"
“டேய் ரொம்ப ஓவரா போறடா. லவ்வர் மாதிரி ஓவராக் கோச்சுக்கிட்டா உன்னோட ஒன்லி அண்ட் மேன்லி ப்ரண்டு நான் என்னடா பண்ணுவேன்" சமாதானக் கொடி பிடிக்க
முயற்சித்தான்.
“ஒன்லின்னு சொல்லு மேன்லின்னு எல்லாம் சொல்லாத" நண்பனின் காலை வாரினான்
சாஸ்தா.
“பொறாமை டா உனக்கு"
“ஆமா
ஊருக்குள்ள சொல்லிக்கிட்டாங்க. இந்த அஷ்டகோணலான முகத்தைப் பார்த்து எனக்கு பொறாமை ஒன்னு தான் கேடு”
“இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருந்தா ஒரு வருஷமானாலும் அவன் வழிக்கு வர மாட்டான். அவனை சமாதானப்படுத்த தான் காலம் காலமா என்கிட்ட ஒரு வழக்கம் இருக்கே” என்று நினைத்த பரசு அடுத்தகணம் தன் அருகில் இருந்தவனை இடையில் கிச்சுக்கிட்டு காட்ட ஆரம்பிக்க, குலுங்கிச் சிரிக்க ஆரம்பித்தான் சாஸ்தா.
அந்த அதிகாலைப் பேருந்தில் இருந்த சில நபர்கள் இவர்களை வித்தியாசமாய் பார்க்க, தலையில் அடித்துக் கொண்டாள் யசோதா. இந்த ஓணானுக்கும் உடும்புக்கும் வேற வேலையே இல்ல என்கிற முணுமுணுப்பு வேறு.
“விடு டா” சாஸ்தா துள்ளிக்கொண்டே சொல்ல, “நீ எப்பவும் போல இருப்பேன்னு சொல்லு நான் விடுறேன்" பேரம் பேசினான்.
“சரிடா எருமை” என சாஸ்தா சொன்ன பிறகு தான் விடுதலை கிடைத்தது அவனுக்கு. இருவரும் சமாதானம் அடைந்த பிறகு சாஸ்தாவின் தோளில் கை போட்டு தன்னுடன் நெருக்கமாக்கிய பரசு, “என் மேல கோவம் வந்தா பளீருன்னு அறைஞ்சிடு” பரசு சொல்லி முடிக்கும் முன்னரே இடது கன்னத்தில் அறை விழுந்துவிட்டது சாஸ்தாவிடம் இருந்து.
“ஏன்டா இப்படி” பரசு பாவமாய் கேட்க, “இப்ப தான் என் கோவம் முழுசா போய் இருக்கு. இப்ப சொல்ல வந்ததை சொல்லு” கூலாகச் சொன்னான் சாஸ்தா.
“உன்னோட அலும்பு ஓவரா தான் போய்க்கிட்டு இருக்கு பார்த்துக்கிறேன்”என்றுவிட்டு ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான் பரசு.
சற்று நேரம் அமைதியில் கழிய, “மத்தவங்க கிட்ட எப்ப உண்மையை சொல்லப் போற” சாஸ்தா ஆரம்பித்தான்.
“நாம இங்க வந்த வேலை நல்லபடியா முடியட்டும் அதுக்கு அப்புறம் பார்த்துக்கலாம்” விரக்தியாய் வந்தது பதில்.
“பொதிகை
மலைக்கு நாம வந்த வேலை முடியும் நேரம், நீ சொல்றியோ இல்லையோ எல்லார்கிட்டேயும் நான் உண்மையைச் சொல்லத் தான் போறேன்” என்ற சாஸ்தாவை அவன் பெரிதாகத்
தடுக்கவில்லை. அதன் பின்னர் பெரிதாக பேச்சுவார்த்தை இல்லாமல் அமைதியாக தொடர்ந்து பேருந்துப் பயணம்.
வனத்துறை சோதனை மையத்தில் அனுமதி பெற்று, அங்கிருந்து வாகனம் மூலம் சுமார் பத்து கி.மீ. தொலைவு உள்ளே சென்று போனக்காடு பிக்கெட் ஸ்டேசன் என்ற இடத்தை அடைந்தனர். அந்த இடத்திலிருந்து, பொதிகைமலை ஏறும் அவர்களின் சாகசப் பயணம் துவங்கியது.
கருத்துகள்
கருத்துரையிடுக